கோடையும் வாடையும் !




                                              திருச்சி . A.முஹம்மது அபூதாஹிர்
                                                            தோஹா - கத்தார்
                                                                thahiruae@gmail.com

Ø  கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதைவிடை வரதட்சணையால் பலபெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
மிக கொடுமையானது!

Ø  வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின் வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
Ø  மே,ஜூன்,ஜூலை
வாடைக் காற்றால்
உடலெல்லாம் வியர்த்து விட்டது !
வரதட்சணையின் தீ ஜுவாலை
எமது சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !

Ø  எத்தனை டிகிரி
வெயிலடித்தாலும்
குறைவானது !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !

Ø  கோடையின்

கத்திரி வெயிலடித்தது

வீட்டில் இருக்க முடிய வில்லை !
எங்கள் புத்திரிக்கு
திருமணம் நடந்தது
வீட்டை விற்காமல் இருக்க முடிய வில்லை !

Ø  அறுபது டிகிரி வெயிலடித்தால்
குளிர் பானம் குடிக்கலாம் !
அறுபது பவுன் வரதட்சணை கொடுத்தால்
அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது ?

Ø  பாரன்ஹீட்டை விட
படு வேகமாக உயர்கிறது
பவுன் ரேட்!
வெயில் கூட இறங்குகிறது
ஜீரோ டிகிரி
செல்சியசுக்கு!
பவுன் விலையோ
எகுறுகிறது
ஏழைகள் தொட முடியாத தூரத்திற்கு!


Ø  கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள் !
வரதட்சணை கொடுமையால்
வீட்டையே விற்றவர்கள்
எங்கே போவார்கள்?

Ø  மகனுக்கு நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என வரும்போது
வாய் மூடி விடுகிறார்கள்!
Ø  பாலைவனத்தில்
நீர் அங்கே
இருப்பது போல் தெரிகிறது
ஆனால் அங்கே இருப்பது  கானல் நீர் !
கலயாணத்தில்
இங்கே பெண்ணை பெற்றவர்கள்
சிரிப்பது போல் தெரிகிறது
அவர்களுக்குள் மறைந்திருப்பது கண்ணீர் !

Ø  கோடை மழை இன்று வரும்

வானிலை அறிக்கையால்

உள்ளம் குளிர்ந்தது !

“கொடுமையான வரதட்சணை,

இந்நிலை என்று மாறும் ?”

உள்ளம் கொதிக்கிறது !


Ø  கோடையின் வாடை காற்று !
காய்ந்து போகும் இலை!
தலை வலி, மயக்கம் என்ற நிலை !
அவை கொடியதல்ல வரதட்சணையை விட !
பெண் சிசுக்கொலை!
இளம் பெண்களின் தற்கொலை!
மாமியார்கள் செய்யும் ஸ்டவ் படுகொலை
இவைதான் கொடியது கோடையை விட !


Ø  கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து தடுத்து விடலாம் !
கொதித்தெழு சகோதரா !
இந்த அக்கிரமத்தை எதிர்த்து!
நீ மனம் வைத்தால் வைத்தால் நிச்சயம் தடுத்து விடலாம் !
ஜில்லுனு ஒரு கல்யாணம் எப்போது ?

(வரதட்சனை கொடுமை கோடை வெயிலுடன் ஓர் ஒப்பீடு .இது துபையில்  “கோடையும் வாடையும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் சங்க மலருக்காக எழுதப்பட்டது. )
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !