சேஷாலம் முதல் அப்துல்லாஹ் வரை - பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் ஒரு பாடம்



திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் .
தோஹா – கத்தர்
thahiruae@gmail.com

அது  2010 டிசம்பர் 25.    கத்தார் தலைநகர் தோஹா வந்திருந்தார் .டாக்டர் பெரியார் தாசன் அப்துல்லாஹ் .மாபெரும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது தாம்  இஸ்லாத்துக்கு நடந்து பாதையையும் ,தாம் கடந்து வந்த பல பாதைகளையும் விளக்கினார் .அதில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தினை அழகாக விளக்கியதோடு நில்லாமல் முஸ்லிம்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பொறுப்பு உள்ளது என்ற அறிவுரையையும் முஸ்லிம்களுக்கு வழங்கினார் .
நிகழ்ச்சி முடிந்தப் பின் மறுநாள் ஒருமணிநேரம் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் சென்று அவருடன் நான் பேசினேன் .சமூகம் பற்றியல்ல , உறவுகளைப்  பிரிந்து  தூரத்தில் வாழும் தனிமையும் குழப்ப எண்ணங்களால் உள்ளத்தில் ஓரத்தில் கவலைகளும் என்னை தொற்றி இருந்ததால் .மனோதத்துவ நிபுணரான  அவரிடம் ஆலோசனை பெறவே அந்த சந்திப்பு. .நபி வழி நின்று அழகாக எனக்கு வாழ்வின் நிலைகளை வாழ வேண்டிய முறைகளை விளக்கினார். அந்த சந்திப்பு என் வாழ்வில் என்றும்   மறக்க முடியாதது .

பேராசிரியர் அப்துல்லாஹ் பெரியார் தாசன், அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்று சொல்லமாட்டேன் .தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லுவேன். .தான் ஏற்றுக் கொண்ட நேரிய மார்க்கத்தினை சமூகம் முழுவதும் கொண்டு சொல்ல அவர் கடந்த இரு ஆண்டுகளாக இறுதி காலம் வரை பேசிக் கொண்டே இருந்தார் .
சைவம் ,பவுத்தம் ,நாத்திகம் என பலவித சிந்தனைப் பயணங்களை மேற்க் கொண்ட பேராசிரியர் அப்துல்லாஹ் வாழ்வின் கடைசி காலத்தில் ஏறத்தாழ பத்தாண்டுகள் இஸ்லாமிய வேதமான பரிசுத்த குர்ஆன் மற்றும் அதன் விளக்கமான ஹதீஸ் - நபி மொழியை படித்து ஆராய்ந்து வாழ்வியல் நெறியாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் .
பகுத்தறிவு என்றப் பெயரில் எதை எடுத்தாலும் மறுக்கும் மக்கள் ஒரு புறமும் ,மதம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக கண்டதையும் கேட்டதையும் நம்பும் மக்கள் மறுபுறம் உள்ள சமூக அமைப்பில் தோன்றிய அவர் நடுநிலை ,நிதானம் ,உண்மை என்று அறிந்தப் பின் உடன் தயக்கமின்றி ஏற்கும் தைரியம் ஆகிய நற்குணங்கள் உடைய மனிதராக விளங்கினார் .
சேஷாலம் என்னும் பெயரில் வைதீக சைவ குடுமபத்தில் பிறந்த அவர் இந்து வேதங்களை நன்கு அறிந்திருந்தார் . .சங்கராச்சாரியாரிடமே நேரடியாக அவர் நடத்திய விவாதம் அவரின் வேத அறிவைக் கண்டு மக்களை பிரமிக்க வைத்தது .
பெரியார் அவர்களின் பேச்சில் ஈர்ப்பு ஏற்ப்பட்டு தன் பெயரை பெரியார் தாசன் என மாற்றிக் கொண்ட அவர் , சாதி ஒழிப்பு ,கடவுள் மறுப்பு என பகுத்தறிவு பிரச்சாரம் மேற்க் கொண்ட அவர் ஆயிரக்கணக்கான மக்களை நாத்திகர்களாக மாற்றினார் .

பின்னாட்களில் மதம் இல்லா அறிவியல்  முடமானது என்ற ஐன்ஸ்டீனின் வார்த்தைக்கொப்ப மதம் குறித்து ஆய்வு மேற்க் கொண்டார்.  அண்ணல் அம்பேத்கர் வழியில் பவுத்தம் தழுவினார் .சித்தார்த்தன் என்று தன் பெயரினை மாற்றிக் கொண்ட அவர் .பவுத்தம் குறித்து அம்பேத்கர்  எழுதிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார் .
பவுத்தத்தில் அவர் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் குழப்பத்தின் உச்சியில் அவர் இருந்த போது கிறிஸ்தவம் குறித்தும்  அவர் ஆராயாமல் இருக்க வில்லை .
கடைசியில் திருக்குர்ஆனை ஆராய்ச்சி செய்தார் ..ஆண்டுகள் உருண்டோடின .அமீரக பயணம் மேற்க் கொண்ட போது மறுமைக் குறித்து அவர் நண்பர் எழுப்பிய கேள்வி  அபுதாபியில் அந்த இரவு அவரது இருக் கண்கள் மட்டுமல்ல.மனக் கண்ணும் அன்று விழித்துக் கொண்டது .

சவூதி பயணம் செய்தார் ஆம்!.இஸ்லாம் பிறந்த தேசத்திற்கே சென்றார்..இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று உலகிற்கு தான் உண்மை மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதை உரக்கப்  பிறகடனப் படுத்தினார் .தம்மை அப்துல்லாஹ் என உலகிற்கு அறிமுகப் படுத்தினார் .அதுவே அவரது இறுதியான மற்றும் உறுதியான பெயராகி விட்டது

அவரின் வாழ்க்கை உலகிற்கு உணர்த்தும் பாடங்கள் பல .
படிப்பின்  நோக்கமே பண முடிப்பு பதவி என பொதுவாக சமூகம் உள்ள பொருளாதாய பிம்பத்தில் இருந்து வெளிவந்து படிப்பின்  முக்கிய நோக்கமே சிந்தனை துடிப்பு என்பதை அறிவு ஜீவிகள் உணர வேண்டும் என்பதே அது .
அவர் மனோதத்துவ நிபுணர் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் , மற்றும் பேராசிரியர் என்று பல பரிணாமங்களில் இருந்தாலும் அவர் சிந்தனைப் பயணத்தை நிறுத்த வில்லை .பல நூல்களை படித்து ஆராய்ந்து உண்மையின் உச்சியான இஸ்லாத்தினை இறுதியில் அடையும் வரை அவரின் சிந்தனை சிறகுகள் விரிந்துக் கொண்டேதான் இருந்தது .
காலம் காலமாக நம்பப் படுவதாலோ ,பெரும்பான்மையாக  அதிக  மக்கள் நம்புவதாலோ ,தலைவர்கள் பின் பின்பற்றுவதாலோ ஒருக் கொள்கை உண்மையாகி விடாது .எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அவை  மெய்ப் பொருளா என  அனைத்தும் கேள்விக்கு உட்படுத்தப் பட வேண்டும் .
அவர் காலம் காலமாக நம்பப் படும்  மத நம்பிக்கை  ,பெரும்பான்மையான அதிக மக்கள் எந்த சிந்தனை இன்றியும் அப்படியே பின்பற்றும் செயல் பாடுகள் ,பகுத்தறிவு என்ற பெயரில் தலைவர்கள் அறிமுகப் படுத்தியது அனைத்தையம் கேள்விகளுக்கு  உட்படுத்தினார் . கடைசியில் இஸ்லாத்தையும் தனது வினாக்களுக்கு உட்படுத்தி ஆராய்ந்தார், இறுதியில் உண்மை என அறிந்து இஸ்லாத்தை உளப்பூர்வமாக  ஏற்றுக் கொண்டார் .

பலரும் இஸ்லாத்தை உண்மை என அறிந்தும் சமூகத்தில் பதவி ,சொத்து  ,கவுரவம் ஆகியன போய் விடும் என பயந்து ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர் .அல்லது இஸ்லாத்தை  ஏற்றுக் கொண்டதை மறைத்து வைத்து கொள்கின்றனர். உண்மையான மார்க்கம் இஸ்லாம் என தெரிந்தப் பின் டாக்டர்  அப்துல்லாஹ் நேர்மையோடு ஒப்புக் கொண்டார் .நெஞ்சு நிமிர்த்தி அதை உலகுக்கு அறிவித்தார் .இவையும் ஒரு முக்கிய பாடமாகும்


முஸ்லிம்களுக்கு அப்துல்லாஹ் பெரியார் தாசன் உணர்த்தும் பாடங்கள் பல
அவர் ஒருபோதும் தம்மை பெரும்பான்மையான சமூகத்தில் மக்கள் எப்படி தங்களை  சுன்னத் ஜமா அத் அல்லது  தவ்ஹீத்வாதிகள்  என்று அறிமுகப் படுத்திக் கொள்கின்றனரோ அவர் தன்னை அப்படி  அறிமுகப் படுத்த வில்லை .அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவதுப் போல முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் )வழிப் பட்டவன் என்று மட்டுமே தன்னை அறிமுகப் படுத்தினர் .
எனவே நம்மை முஸ்லிம்கள் என்று அறிமுகப் படுத்துவதே சரியான இஸ்லாமிய அடையாளமாகும் .
முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்தும் பேசினார் அவர் இஸ்லாத்தை ஏற்று சென்னை திரும்பிய பொது எதிர்ப்பவர்கள் கருத்துவேறுபட்டாலும் ஒரே அணியில் நின்று விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்ததும் அவர் இஸ்லாத்தை ஏற்றதை வரவேற்ற முஸ்லிம்கள் வேறு அணி அணியாக பிரிந்து தனி தனியாக  வரவேற்றதையும்  குறிப்பிட்டு வருத்தப் பட்டார் .
நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றினை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற குர்ஆனின் அறிவுரையை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
பிரியாணி சாப்பிட பிற மத சகோதரர்களை  அன்போடு அழைக்கும் முஸ்லிம் சமூகம் மார்க்கத்தை பிற சகோதரர்களுக்கு எத்தி வைக்க  பெரும்பாலும் முன்வரவில்லை என்பதையும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டு காட்டினார் .
அவர் இஸ்லாத்தை ஏற்றதோடு நில்லாமல் இஸ்லாம் குறித்து பல கூட்டங்களில் பேசினார் .
பகிரங்கமாக திருமாவளவன் போன்றவர்களுக்கு அழைப்பு விடுத்தார் .
ஓரிறை கொள்கை குறித்து அவரது பேச்சு அனைவருக்கும் தவ்ஹீத் ஏகத்துவத்தை விளக்குவதாக அமைந்தது .
மனோதத்துவ மருத்துவத்தை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எடுத்து வைத்தார் .
இஸ்லாத்தை ஏற்ற சில ஆண்டுகளிலேயே மற்றவர்களுக்கு அதை எத்தி வைத்தார் .
குர்ஆன் கூறுகிறது இதோ !
எவர் அல்லாஹ்வின் பால் (மக்களை) அழைத்து நல்ல செயல்களை செய்து நிச்சயமாக நான் முஸ்லீம்களில் நின்றும் உள்ளவன்என்று கூறுகிறாரோ, அவரை விட சொல்லில் அழகியவர் யார் ? (திருக் குர்ஆன் 41:33)
இஸ்லாத்திலேயே பிறந்து ஆண்டாண்டு காலமாய் பாட்டன் முஸ்லிம் முப்பாட்டன் முஸ்லிம் என பெருமையடிக்கும் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பிரச்சார பணியில் பின் தங்கி இருப்பதுதான் வருத்தமான உண்மையாகும் .
மனோதத்துவ நிபுணர் , நடிகர் ,பேராசிரியர் ,பேச்சாளர் என பலராலும்  அவர் எப்படி அவர் அறியப்பட்டாலும் வரலாற்றில் அவரின் கடைசி தோற்றமான முஸ்லிம் என்றே பெரும்பாலும் பெரிதும் பேசப் படும் எனபதுதான் மறுக்க முடியாத உண்மையாகும் ..அவரின் இஸ்லாத்தை நோக்கிய சிந்தனை பயணம் ஆயிரக்கணக்கான மக்களை அவர் நடந்துச் சென்ற பாதை நோக்கி செலுத்தும் எனபதும் நம் நம்பிக்கையாகும் (இன்ஷா அல்லாஹ் )
அன்றாடம் படித்து விட்டு வடை மடிக்கவும் அழுக்கு துடைக்கவும் பயன் படும் இன்றைய சில பத்திரிக்கைகள் அவரின் முஸ்லிம் என்ற தோற்றத்தினை மறைத்து அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பழைய பெரியார் தேசனாகவே செய்தி வெளியிடலாம் .எனினும் நாளைய தலை முறை படிக்க போகும் வரலாற்றில் அவரின் பெயர் அப்துல்லாஹ் என்றுதான் பதியப் பட்டிருக்கும் .அவர் ஒரு முன்மாதிரி முஸ்லிமாக முன் மொழியப் படுவார் எனபது அறிவுலகின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும் .
மாற்று மத சகோதர்களுக்கு !
அவரின் மனோதத்துவத்தில் நீங்கள் சிகிச்சை பெற்று இருக்கலாம் .
அவரின் நகைச்சுவை பேச்சில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கலாம் .
அவரின் அறிவுபூர்வமான வாதங்களில் நீங்கள் பயனடைந்து இருக்கலாம் .
அவரது மாணவராக இருந்து கல்வி பெற்றிருக்கலாம் .
ஏன் ?  பத்தாண்டு கால சிந்தனைகள் , பல நூல்கள் படித்து ஆராய்ச்சி மூலம் அவர் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை நீங்களும் ஏன்  ஆராய்ந்து ஏற்கக் கூடாது ?
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக. (அல்-குர்ஆன் 76:29)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !